செவ்வாய், 11 அக்டோபர், 2011

இலங்கை முஸ்லிம் சமூகத்தை புறக்கணிக்கும் இந்தியா..?

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய உயர் அதிகாரிகள் குழு பல அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ் கட்சிப் பிரதிநிதிகளையும் இந்திய குழுவினர் சந்தித்துள்ளனர். வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியைக்கூட இந்தியக் குழுவினர் சந்தித்து உள்ளனர்.
தற்போது சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் மற்றுமொரு உயர்மட்டக் குழுவினரும் இவ்வாறே உள்ளுர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
இருந்தபோதும் இந்திய தரப்பினர் இலங்கை முஸ்லிம்களின் எந்தவொரு அரசியல் பிரதிநிதிகளையும் அப்போதும் சந்திக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவைப் பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளைக்கூட இந்திய தரப்பினர் சந்திக்கவில்லை. இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், முஸ்லிம் சார்பு ஊடகங்களும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தன.
இலங்கை முஸ்லிம்களின் அதிருப்தியை இந்தியா உரியமுறையில் உள்வாங்கியிருப்பின் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனாலும் அந்த வாய்பபை இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்காமை காரணமாக இந்தியா இலங்கை முஸ்லிம்களை திட்டமிட்டுத்தான் புறக்கணிக்கிறது என்ற விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் எப்போது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதோ அப்போதிருந்தே இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து வருகின்றமையை நோக்கமுடிகிறது.
இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை இந்திய விரும்பாமையால்தான் இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்காமல் தவிர்த்து வருகிறதாவென்ற கேள்வி இங்கு மேலோங்குகிறது.
அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பிரச்சினைகளும் இல்லை என்றடிப்படையில் இந்தியா செய்றபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இருந்தபோதும் இந்தியா இவ்வாறு இலங்கை முஸ்லிம்களை தொடர்ந்து புறக்கணிக்கின்றமையும், இலங்கை முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதும் இலங்கை முஸ்லிம்களிடையேயே இந்தியா குறித்த தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தவே செய்யும். இந்தியாவின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாக உள்நோக்கம் கொண்டு இந்தியா, செயற்படுகிறதாவென்ற பரவலான சந்தேகமும் இலங்கை முஸ்லிம்களில் ஒரு தரப்பினரினரிடம் ஏற்படுட்டுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், இந்தியாவின் உட்துறை அமைச்சர் சிதம்பரம், பாகிஸ்தான சார்பு அமைப்புக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு இலங்கையை நுழைவாயிலாக பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையிலும் இந்தியாவின் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான நகர்வுகள் உற்றுநோக்கப்படவேண்டியவை.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுக்கின்படி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற உண்மை பகிரங்கப்படுத்தப்படுமென அமைச்சுர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில் இலங்கையின் வடகிழக்கு மகாணத்தில் தமது பிடி தளர்ந்துவிடுமோவென்ற அச்சம் காரணமாகவும் இலங்கை முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பை இந்தியா மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் நாம் மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் நாட்டை பிரிக்க பங்காற்றியமை, காஸ்மீர் பகுதியில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு, இந்தியா முஸ்லிம்களுக்கெதிரான குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தாமை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை முஸ்லிம்களை முற்றாக புறக்கணித்தமை, ஆப்கானிஸ்தானில் எழும் எத்தகைய இஸ்லாமிய சார்பு அரசையும் வீழ்த்துவதற்காக ஹமீத் ஹர்சாயுடன் அண்மையில் செய்த ஒப்பந்தம் என இந்தியாவின் முஸ்லிம் உம்மாவிற்கெதிரான வெளிப்படை அநியாயங்களை இலங்கை முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்வதும் இங்கு சிறந்ததாக அமையும்.
இந்தியா முஸ்லிம் உம்மாவிற்கெதிராக மேற்கொண்ட இந்த அநியாயங்களை மற்றுமொரு வகையில் இலங்கை முஸ்லிம்கள் மீதும் ஏதோவொரு வகையில் கட்டவிழ்த்துவிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்று நாம் ஒருபோதும் கூறவிட முடியாது. சிலவேளைகளில் இலங்கை ஆட்சியாளர்களிடமும், சிங்கள சமூகத்திடமும் முஸ்லிம்கள் மீது தவறான அபிப்பிராயங்கள் ஏற்படும்வகையில் இந்தியா தனது திட்டங்களை வகுத்திருக்கலாம்.
அந்தவகையில் பிராந்திய வல்லரசாக செயற்படும் இந்தியாவின் நகர்வுகள் குறித்து உரியவகையில் பகுப்பாய்வு செய்து இலங்கை முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டுவது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகுமென்றால் அது மிகையாகாது.
(குறிப்பு – இந்த சிறு கட்டுரை குறித்த மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக