செவ்வாய், 11 அக்டோபர், 2011

கருப்பு ஒக்டோபர் அகவை 21

ஒக்டோபர் இலங்கை வரலாற்றில் இருண்ட கருப்பு பக்கங்களை கொண்டுள்ள மாதமாகும். ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டில்தான் வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒக்டோபருடன் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் அரங் கேற்றப்பட்டு அவர்களின் அசையும் அசையா சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அவர்களின் தாயக பூமியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் தாக்கங்கள் இன்றும் மாறாத காயங்களுடன் அப்படியே இருக்கிறது. ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அதன் விளைவைத்தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் எந்த ஆக்கபூர்வமான கொள்கை மற்றும் நடவடிக்கை இன்றி இருப்பது தெளிவுபடுத்துகின்றது. சர்வதேசம் இது பற்றி போதுமான தகவல்கள் இன்றி இருப்பது ஆச்சரியம் தந்தாலும் அதுதான் உண்மை.
தற்போது பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது அரசியல் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளது ஆனால் முஸ்லிம் தரப்பு உள்வாங்கப்படவிலை. வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ௨௧ ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மீள்குடியேற்றம் வடக்கின் நகரங்களின் மத்தியில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகளிலும் , வீடுகளிலும் வீதிகளையும் வீடுகளையும் பிளந்து கொண்டும் காடுகளாக முளைத்துள்ள மரங்களை வெட்டி பிரதேசத்தை சுத்தப்படுத்தி பாதைகளை ஏற்படுத்தியதுடன் நின்றுவிட்டது. பல தடைகளையும் மீறி மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்கள் வடக்கின் அரச அதிகாரிகளினால் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதாக மீள் குடியேற சென்றுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருப்பு ஒக்டோபர் மாதமான இந்த மாதத்தில் கருப்பு ஒக்டோபர் தொடர்பான பல தகவல்களையும் , கட்டுரைகளையும் நாம் வழங்க எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பான தகவல்கையும் செய்திகளையும் வாசகர்களும் எமக்கு தந்து உதவமுடியும் என்பதையும் அறியத்தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக